Thursday, 26 September 2019

எருக்கத்தம்புலியூர் ராஜேந்திரப் பட்டினம் ஆனது எப்படி:

எருக்கத்தம்புலியூர் ராஜேந்திரப் பட்டினம் ஆனது எப்படி:
சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்து வரும் நீலமலர்க்கன்னி உடனுரை நீலகண்டேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ள ஊர் ராஜேந்திரப்பட்டினம். எங்கும் நீக்கமற நிறைந்துள்ள சிவன், ஆன்மாக்கள் தன்னை வழிப்பட்டு உயர்வு பெற வேண்டும் என்ற பெருங்கருணையால் சிவலிங்கம் முதலான திருவுருவங்கொண்டு எழுந்தருளியிருக்கும் தலங்கள் பலவற்றுள் ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய தேவார மூவர் அருளிய திருப்பதிகங்களை பெற்ற 22 திருத்தலங்களில்  ஒன்றாய் மூர்த்தி, தலம், தீர்த்தம், ஆகிய மூன்றாலும் சிறப்புற்றதாய் விலங்குவது ராஜேந்திரப்பட்டினம் ஆகும்.

எருக்கத்தம்புலியூர் என்ற ராஜேந்தரப்பட்டினம்:
ராஜேந்திரப்பட்டினம் விருத்தாசலம்&ஜெயங்கொண்டம் சாலையில் அமைந்துள்ள ஒரு அழகான சிற்றூராகும். ராஜேந்திரப்பட்டினம் வெள்ளை எருக்கு அதிகம் விளைந்திருந்ததாலும், கோவிலின் தல விருட்சமாகய் கொண்டதாலும், அந்த மரத்தின் பெயரால் எருக்கத்தம்புலியூர் என அழைக்கப்பட்ட ஊராகும்.
ராஜராஜசோழன் தனக்கு மகப்பேறு வேண்டி வழிப்பட்டு ராஜேந்திரசோழன் என்ற மன்னனை பெற்றெடுத்ததால் இந்த ஊருக்கு ராஜேந்திரப்பட்டினம் என்ற பெயர் உண்டானதாக செவி வழி செய்திகள் தெரிவிக்கின்றன.
வியாக்ரபாத முனிவரால்(புலிக்கால் முனிவர்) பூஜிக்கப்பட்ட சிதம்பரம் என்ற பெரும்பற்றபுலியூர், பெரும்புலியூர், திருப்பாதிரிபுலியூர், ஓமாம்புலியூர், திருஎருக்கத்தம்புலியூர் ஆகிய புலியூர் என்ற 5  ஊர்களில் உள்ள கடவுள்களை வழிப்பட்டு¢ வந்துள்ளார். நீலகண்டேவரரை திருக்குமாரசுவாமி என்றும் திருநீலமலர்கன்னியம்மையை அம்பிகை வீறார் முல்லையம்மை என்றும் மறுபெயரால் அழைக்கப்படுகிறார்.
தேவாரத்திற்கு இசையமைத்த இசை மேதை:
63 நயன்மார்களில் ஒருவரும், திருஞானசம்பந்தர் காலத்தில் வாழ்ந்து அவர் இயற்றிய  தேவாரத் திருப்பதிகங்களுக்கு உடனிருந்து யாழ் வாசிக்கும் தொண்டினை செய்தருளிய திருநீலகண்ட யாழ்ப்பாணர் அவதரித்த சிறப்பைப்பெற்றது இந்த ஊர். தேவாரத்திற்கு இசை அமைத்த இசைமேதை என்பதால், அவர் பெயரால் சிவன் திருநீலகண்டேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

கயிலாயத்தில் சிவபெருமான் வேதகாமங்களின் உட்பொருளை உபதேசித்த போது அதனை பாராமுகமாக கேட்ட குற்றத்திற்காக உமையம்மையை மீனவர் குல பெண்ணாக பிறக்குமாறு சிவன் சாபமளித்தார். முருகன் சினந்து தன் தாயை சபித்ததற்கு காரணமாக இருந்த அந்த நூல்களை கடலில் வீசினார். அந்த குற்றத்திற்காக உருத்திர சன்மாராய்(ஊமையாய்) பிறந்த முருகன், இந்த தலத்தை அடைந்து சிவபெருமானை பூஜித்து ஊமை நீங்கப்பெற்றார், என்றும் அதனால் இந்த கோவிலை குமரேசபுரம் சுவாமி எனவும், குமாரசுவாமி எனவும் அழைக்கப்பட்டதாக தல புராணம் தெரிவிக்கின்றது.

விருத்தாசலம் வந்து பழமலைநாதரை வணங்கிய தேவகணங்கள், அதிகமான வரங்களும், எளிதில் முக்தியடையும், சிவதலம் எது என்று கேட்டனர். அப்போது பழமலைநாதர் எருக்கத்தம்புலியூர் என்று கூற அந்த தேவகணங்கள், எல்லாம் ராஜேந்திரப்பட்டினம் என்ற எருக்கத்தம்புலியூர் கிராமத்திற்கு வந்து சிவலிங்கத்தை பூஜித்து, முக்தி அடைந்ததால், கணேசுரம் என்ற பெய-ரும் இந்த கோவிலுக்கு உண்டாயிற்று,

ஸ்கந்த புஸ்கரணி தீர்த்தம்:
உச்சிணி பட்டணத்து ராஜா சுவேதன் என்பவர் முன்செய்த கருமவினையால் வெண்குஷ்டம் ஏற்பட்டு அதனால் சிவனை இரவும், பகலும் சிந்தித்து வணங்கி, வந்த போது அவர் கனவில் தோன்றி திருஎருக்கத்தம்புலியூர் தலத்திற்கு சென்று தீர்த்தத்தில் மூழ்கி வழிப்பட்டு வந்தால் நோய் தீரும் என கூறியதால் அவ்வாறு செய்த அவருக்கு நோய் நீங்கி நலமானதாக கூறப்படுகிறது.அதனால் இந்த தீர்த்தத்திற்கு ஸ்கந்த புஸ்கரணி தீர்த்தம் என்றும், இதனால் சிவனுக்கு சுவேதார்க்வனேஷ்வர் என்றும் பெயர் உண்டாயிற்று. இந்த தலம் வெண்குஷ்டம் நீங்கிய தலம் என்று தல வரலாறுகள் தெரிவிக்கின்றன. எருக்கத்தம்புரியூரில் பாவங்கள் செய்தால் அவனை கெடுத்து கொன்றுவிடுமாம். மோட்சமும் கிடைக்காதாம்.. மற்ற ஊர்களில் செய்த பாவமானது இந்த எருக்கத்தம்புலியூருக்கு வந்து இறைவனை தரிசினம் செய்தால் தீர்ந்துவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வேறு எந்த ஊரில் உள்ள ஸ்தலங்களை வழிப்பட்டாலும் பாவங்கள் தீராது என்பது ஐதீகம்.

உடையார்பாளையத்து ஜமின் வந்து தேர் இழுத்தால்தான் தான் இந்த கோவில் தேர் ஓடும். ஆனால் கடந்த சில வருடங்களாக ஜமின் வாரிசுகள் வராததால் பக்தர்களே தேரினை இழுத்துவிடுகின்றனர். விளந்தை செங்குந்தர் இன மக்கள் இந்த கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்தில் வந்து கொடியேற்றப்பட்டவுடன், இந்த சிவனை வணங்கி சென்ற பிறகுதான் தங்களது நெசுவு தொழிலை ஆரம்பிப்பார்கள் என கூறப்படுகிறது. அவ்வாறு நெசவு தொழிலை ஆரம்பித்தால் தொழில் நன்கு விருத்தியடைந்து வியாபாரம் பெருகும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாகும். பங்குனி 2, 3, 4, 5 ஆகிய தேதிகளில் இந்த சிவனின் மீது சூரிய உதயத்தின் போது சூரியனின் கதிர்கள் சிவலிங்கத்தை சில நொடிகள் தரிசினம் செய்வதை காணலாம் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.


வரலாற்று ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் கூறும் போது கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்த ஊரில் உள்ள விவசாயி ஒருவரது வயலில் குழி தோண்டிய போது கலைநயமான புத்தர் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்த புத்தர் சிலையில் புத்தர் மட விகாரி மகேந்திரவர்மன் என பொறிக்கப்பட்டிருந்தது. இதனை வைத்து பார்க்கும் போது பல்லவர் காலத்திலும் இந்த ஊர் புத்த மதத்தை தழுவி வந்துள்ளதும் வரலாற்று ஆய்வில் தெரிய வருகிறது. ஆனால் இந்த புத்தர் சிலை திடீர் என அங்கிருந்து காணமல் போய்விட்டது. இந்த ஊர் பட்டிணம் என அழைக்கபடுவதால் மிகப்பெரிய வர்த்தக நகரமாக விளங்கி வந்துள்ளதாக வராற்று ஆய்வாளர் பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் தெரிவிக்கின்றார். மேலும் அவர் கூறும் போது இந்த ஊரில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் கி.பி. 10&13ம் நூற்றாண்டு வரை இடைக்கால மக்கள் வாழ்ந்த தடயங்கள் கிடைத்துள்ளது.




சப்தகூடல் சாத்துக்கூடல் ஆனது எப்படி

சப்தகூடல் சாத்துக்கூடல் ஆனது எப்படி:

விருத்தாசலம் நகரில் இருந்து தென்மேற்கு திசையில் அமைந்துள்ள அழகான கிராமம் சாத்துக்கூடல். கிராமத்தை சுற்றி








லும் விவசாய பச்சை பசேல் விளைநிலங்கள். ஊருக்கு நடுவே கைலாசநாதர் என்ற சிவதலமும், இந்த தலத்திற்கு அருகில் அமைந்துள்ள அப்பர் மடமும் இந்த கிராமத்தின் பழமையை பறைசாற்றுகிறது. இங்கு அமைந்துள்ள அப்பர் மடத்தில் அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர் ஆகியோர் தங்கி சுற்றுவட்டாரத்தில் உள்ள சிவதலங்களுக்கு சென்று ஆன்மீக பணிகளை மேற்கொண்டனர் என வரலாறுகள் தெரிவிக்கின்றன.

பண்டைய காலத்தில் இந்த கிராமத்தில் உப்பு வியாபாரம் கொடிகட்டி பறந்துள்ளது. சாத்து என்றால் உப்பு என்ற பொருளும் உண்டு. உப்பு வியாபாரிகள் ஒன்று கூடும் இடம் என்பதால் சாத்துக்கூடல் என்ற பெயர் இந்த கிராமத்திற்கு உருவானதாக கூறப்படுகிறது. மேலும் சப்த கன்னிகளான 7 கன்னிமார்களும், தேவலோகத்தில் இருந்து மண்ணுலகிற்கு சாத்துக்கூடல் கிராமத்திற்கு வந்துள்ளார். குறிப்பிட்ட காலத்திற்குள் அவர்களால் தேவலோகம் செல்ல முடியாததால் பூமியிலேயே தங்கி விட்டனர். 7 கன்னிமார்களும் கூடி விளையாடியதால் சப்த கூடல் என இந்த கிராமம் அழைக்கப்பட்டதாகவும், நாளடைவில் சப்தகூடல் சாத்துக்கூடல் என மருவிவிட்டதாக கூறுப்படுகிறது. இந்த சப்த கன்னிகளுக்கு சாத்துக்கூடலில் இருந்து ரெயிலடி சாலை செல்லும் வழியில் கோவில் அமைக்கப்பட்டு அப்பகுதி மக்களால் வழிப்பாடு செய்யப்பட்டு வருகிறது.

சாத்துக்கூடல் கிராமத்தில் சாதுக்கள் கூடி சங்கமித்திருந்ததால் சாதுக்கள் கூடல் என்று இந்த கிராமம் அழைக்கப்பட்டு நாளடைவில் சாத்துக்கூடலாக மருவியதாகவும் கூறப்படுகிறது. வள்ளலாரை போல வாழ்ந்த மனித உருவிலான சசச்சிதானந்தசுவாமிகளை பூஜிக்கும் விதமாக இந்த கிராமத்தில் மோகனூர் சாதுக்கள் ஒருவரால் சச்சிதானந்தசபை நிறுவப்பட்டுள்ளது. இந்த சபை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் அமைந்துள்ளது. இந்த சபையில் சச்சிதானந்தசுவாமிகளுக்கு சித்திரை மாதத்தில் 3 வது வாரத்தில் இருந்து 10 தினங்கள் வரை ஒன்றே கடவுள், உணர்வே பிரம்மம், அறிவே சற்குரு, சற்குருவே கடவுள் என்ற கொள்கையினை சாதுக்களும், பக்தர்களும், பாடி பூஜித்து வருகிறார்கள்.

இங்கே அனைத்து பிரிவினரும் வசிக்கிறார்கள். இதுவரை பிரிவினை வாதம் என பெரிதாக பிரளயம் பிரச்சினைகள் ஏற்படாதது, மக்களிடையேயான ஒற்றுமையை காட்டுவது தனிச்சிறப்பாக பார்'கப்படுகிறது. இப்பகுதியில்  விவசாயமே பிரதானமாக உள்ளது. முன்னொரு காலத்தில் சிறுதானியங்களான கம்பு, கேழ்வரகு, சோளம், வரகு, திணை என விளைந்த புண்செய் நிலங்களாக இருந்தன. ஆனால் இன்று நெல், கரும்பு விளையும் நன்செய் நிலமாக உள்ளது.

இந்த கிராமத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளி நூற்றாண்டுகளை கடந்த பள்ளியாகும். இந்த பள்ளி நடுநிலைப்பள்ளியில் இருந்து கடந்த ஆண்டுதான் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. சரித்திர நாவல்கள் எழுதி புகழ்பெற்ற நாவலாசிரியர் கவுதம நீலம்பரன் என்பவர் வளர்ந்த ஊராகவும், கடல்கடந்து தம் சொல் வலிமையால் புகழடைந்த அமுதமொழி சுவாமிநாதன் பிள்ளை என்பவர் பிறந்த ஊராகவும், தமிழறிஞர் மா.நன்னன் என்பவர் வளர்ந்த ஊராகவும் இந்த ஊர் போற்றப்படுகிறது.

மேலும் இந்த கிராமத்தின் எல்லையில் அமைதியான இடத்தில் அய்யனார் கோவில் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில் ஊரையே அழிக்கும் அளவுக்கு இந்த கிராமத்தில் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் ஊரை காக்கும் எல்லைதெய்வமான அய்யனாரை மனதார உருகி வேண்டியுள்ளனர். கிழக்கு முகதாக நின்றிருந்த அய்யனார் மேற்கில் இருந்து கரைபுரண்டு கிராமத்திற்குள் ஓடி வந்த வெள்ளத்தை திரும்பி வெகுண்டெழுந்து பார்க்க வெள்ளம் அடங்கி, இயல்பு நிலை திரும்பியது. அன்றிலிருந்து இந்த அய்யனார் மேற்கு பக்கம் பார்த்து வீரவாளோடு நிற்கிறார். அதனால் இந்த அய்யனாரை வெள்ளம் காத்த அய்யனார் என்று இந்த கிராம மக்களால் அழைத்து வழிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த அய்யனாரை தமிழகம் முழுவதும் பலர் குலதெய்வமாகவும் வணங்கி வருகின்றனர்.
மேலும் கிராமத்தில் ஆங்காங்கே அரிய வகை நடுகற்கள் அமைந்துள்ளது. அந்த கற்களில் பொறிக்கப்பட்டுள்ள குறியீடுகளும், உருவங்களும், மிகவும் தொன்மையான கிராமம் என்பதை பறைசாற்றுகிறது. பண்டைய காலத்தில் நடந்த போரின் போது தனது மக்களுக்காகவும், மன்னனுக்காகவும் தன் இன்னுயிர் நீத்த போர் வீரன், படைத்தலைவனுக்கான நினைவு சின்னமாக நடுகல் என்ற வீரக்கல்லினை வடித்து அந்த வீரனை நினைத்து வழிபடுவதை பண்டைய தமிழர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர். இங்கு அமைந்துள்ள நடுகல் என்ற வீரக்கல்லானது ஆயிரம் ஆண்டுகள் பழமையாக கல் என தெரிய வந்துள்ளது. சோழர் கால கலைப்பாணியில் இருப்பதால் இந்த கிராமத்தில் அவ்வபோது வரலாற்றாய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Tuesday, 24 September 2019

வாழ்வு மிளிரும்

அழகு உடலில் இல்லை,
மன தெளிவில் உள்ளது.
அறிவு பார்வையில் கிடைக்காது,
தேடலில் கிடைக்கும்.
அன்பு அரவணைப்பில் கிடைக்காது,
கண்டிப்பில் கிடைக்கும்,
பாசத்தால் கோபம் காணாமல் போகும்,
கோபத்தால் வாழ்வே மாயமாகும்.
இதை உணர்ந்தால் வாழ்வு மிளிரும்.

Sunday, 8 September 2019

பழமலை என்ற ஊர் விருத்தாசலம் ஆனது எப்படி :






























விருத்தாசலம் சில குறிப்புகள்:

சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்து வரும் விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிஸீஸ்வரர் கோவில் உள்ள விருத்தாச்சலத்தில்  பிறந்தால், வாழ்ந்தால், வழிபட்டால், நினைத்தால், இறந்தால் என இந்த 5 ல் அவரிடத்தில் ஏதேனும் ஒன்று நடந்தாலும் முக்தி நிச்சயம். இவ்வாறு பல சிறப்புகளை உடைய விருத்தகிரீஸ்வரர் எழுந்தருளியுள்ள திருமுருதுகுன்றம், பழமலை என பல பெயர்களால் போற்றப்படும் விருத்தாச்சலத்தை பற்றி பார்ப்போம்.

பழமலை உருவான கதை:
ஆதியில் பிரம்மன் மண்ணுலகை படைக்க எண்ணி முதலில் நீரை படைத்தார். திருமால் அப்பொழுது தீயவர்களான மதுகைடவர்களை வெட்டி வீழ்த்த நேர்ந்தது. வெட்டுண்ட உடல்கள் பிரம்மன் படைத்த நீரில் விழுந்து மிதந்தன. பிரம்மன் அதை கண்டார். நீரும் அந்த உடல்களும், இறுகி பூமி தோன்றுமாறு சிவபெருமானை வேண்டினார். சிவபெருமாள் ஒரு மலை வடிவாக தோன்றினார். ஆனால் அதனை அறியாமல் பிரம்மன் வேறு பல மலைகளை படைத்தார். ஆனால் பிரம்மன் படைத்த மலைகளுக்கு இடம் இல்லை. அப்போது பிரணவ கடவுள் தோன்றி குறிப்பால் உண்மையை உணர்த்தினார். இதனை அறிந்த பிரம்மன் மலை வடிவாய் இருந்த சிவனை வணங்கினார். சிவன் உடல்களையும், நீரையும் ஒன்றாக இருக்கி மண்ணுலகம் தோன்றுமாறு செய்ததுடன், பிரம்மன் படைத்த மலைகளுக்கும் இடம் தந்தார். அப்போது பிரம்மனிடம் சிவன் நான் வேறு, இந்த மலை வேறு இல்லை. நாமே இம்மலையாக நின்றோம். இந்த மலை தோன்றிய பின்னரே பிரம்மன் படைத்த மலைகள் தோன்றியதால் யாம்  படைத்த மலைக்கு பழமலை என பெயர் வழங்குவதாகவும், இந்த பழமலை மண்ணுலகில் அச்சாணியாக அழுந்தி நின்று மேலே சிவலிங்கமாக விளங்கி நிற்கும். இதனை வழிப்பட்டவர்களுக்கு நினைத்தது நடக்கும் என அருளினார்.

மணிமுக்தாறு உருவான வரலாறு:
 அதன்பின் திருமால், பிரம்மன், இந்திரன் உள்ளிட்ட தேவர்ககள் பழமலைநாரை தரிசினம் செய்த பின்பே தங்கள் பதவிகளை பெற்றதாக கூறப்படுகிறது. இந்த மலையில் தேவர்கள் வந்து கடுந்தவம் புரிந்த போது அந்த தவ தீயினால் ஏற்பட்ட வெப்பத்தால் பிரம்மானந்த வெள்ளம் பெருக்கெடுத்து வழிந்தது. அதனை பழமலைநாதர் தம் கைகளால் தடவி திரு மணிமுக்தாறாக ஓடச்செய்தார். இவ்வாறுதான் பழமலை என்ற விருத்தாச்சலமும், மணிமுக்தாறும் மண்ணுலகில் முதன் முதலாக தோன்றியுள்ளது.

எங்கே உள்ளது இந்த பழமலை:
தொண்டடை மண்டலத்திற்கும், சோழ மண்டலத்திற்கும் இடையில் உள்ள பகுதி நடுநாடு என்பர். நடுநாட்டில் மணிமுக்தாநதியின் இருகரைகளிலும் அமைந்துள்ள நகரம் விருத்தாசலம் ஆகும்.
கடலூர் மாவட்டத்தின் தலைநகரான கடலூர் நகரத்தின் தென் மேற்கு பகுதியில் அழகாக அமைந்துள்ள ஒரு நகரம்தான் விருத்தாச்சலம். இந்த நகருக்கு அழகே மணிமுக்தாறுதான். ஆம் விழுப்புரம் மாவட்டத்தில் உற்பத்தியாகி விருத்தாசலம் என்ற பழமலையை தரிசினம் செய்து செல்லும் ஒரு புண்ணிய நதியாகும். நகரை இரண்டாக பிரித்து கொண்டு செல்லும் இந்த நதி நீரோட்டத்தின் போது அழகாக காட்சியளிக்கும். சென்னை&திருச்சி மற்றும் கடலூர்&சேலம் ரெயில்வே மார்க்கத்தின் நடுவே அமைந்துள்ள இந்நகரத்திற்கு ஆங்கிலேயேர் காலத்திலேயே ரெயில் நிலையம் வந்துவிட்டது. காமராஜர் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் எங்குமே இல்லாத செராமிக் தொழில்நுட்ப கல்லூரியும், தொழிற்பேட்டையும் அமைந்துள்ள நகரமாகும்.
நான்கு எல்லையிலும் காக்கும் முருக கடவுள்:
நகரின் நடுவில் விருத்தகிரீஸ்வரரும், நகரின் எல்லைப்பகுதிகளில் காக்கும் தெய்வங்களாக தென்புறத்தில் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக வேடப்பர் என்ற முருகன் கோவிலும், மேற்கில் தீராப்பிணியை போக்கும் கொளஞ்சியப்பர் என்ற உலக பிரசித்திப்பெற்ற முருகன் கோவிலும், வட பகுதியில் வெண்மலையப்பர் என்ற உழவர்களின் காக்கும் தெய்வமும், கிழக்கு பகுதியில் மக்கள் விரும்பிய பயனை தரும் கரும்பாயிரம் கொண்ட அப்பர் கோவிலும் அமைந்துள்ளன. உலகில் எங்கும் இல்லாத அதிசயமாக நகரின் 4 புறமும் காக்கும் தெய்வங்களால் சூழப்பட்ட சிறப்பு மிக்க நகர் விருத்தாசலமாகும். திருச்சி, சேலம், சென்னை, கடலூர் ஆகிய 4 மார்க்கமாக வரக்கூடிய வாகன ஓட்டுநர்கள், பயணிகள் இந்த 4 கோவில்களையும் வணங்கி விட்டு சென்றால் விபத்து உள்ளிட்ட வேறு எந்த சிக்கலும் இல்லாமல் பயணம் இனிதே அமையும் என்கின்றனர் பக்தர்கள்.


விருத்தாச்சலம் பெயர் காரணம்:
அப்பர், சம்பந்தர், சுந்தரர் காலத்தில் விருத்தாசலம் பழமலை என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் விருத்தாசலம் என்ற வடமொழிச்சொல்லால் அழைக்கப்பட்டது. விருத்தம் என்றால் பழமை என்றும் அசலம் என்றால் மலை என்றும் அழைக்கப்படுகிறது. தற்போது விருத்தாசலத்தில் மலை இல்லை என்று கூறலாம். ஆனால் சன்னதிவீதியில் இருந்து 27 அடி உயரத்தில் குன்றின் மீது அமைந்துள்ள கருவரையில் விருத்தகிரீஸ்வரர் எழுந்தருளியுள்ளார், பழமலையானது பூமியில் புதையுண்டுள்ளது, என்பது எவருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது.

விபசித்து முனிவர் மணிமுக்தா நதியில் மூழ்கி இரவு திருக்கோவிலில் தங்கியதால் அவருக்கு  திருப்பணி செய்யும் அருள் கிடைத்தது. இத்திருக்கோவிலில் தல மரமாக உள்ள வன்னி மரத்தின் இலைகளை திருக்கோவிலின் திருப்பணிகளின் போது விபசித்து முனிவர் தொழிலாளர்களுக்கு வழங்க அந்த இலைகள் அவர்களின் உழைப்புக்கு ஏற்றவாறு பொற்காசுகளாக மாறியது என்றும் மரபு வழியாக பேசப்பட்டு வருகிறது. இந்த வன்னி மரம் 3000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது என ஆராய்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அஸ்தி கல்லாக மாறும் அதிசயம்:
விருத்தாச்சலம் நகருக்கு விருத்தகாசி என்ற பெயரும் உண்டு. காசியை போன்று இத்தள தீர்த்தமான மணிமுக்தாநதியும் புண்ணிய நதியாகும். மணிமுக்தாநதியில் நீராடி மூலவர் பழமலைநாதரை வழிபட்டால் காசியில் நீராடி விஸ்வநாரை வழிபட்ட பலன் கிடைக்கும், அதனால் விருத்தகாசி என்ற பெயர் உண்டாயிற்று என்று வரலாறு தெரிவிக்கின்றன. மேலும் மணிமுக்தாநதியில் இறந்தவர்களின் அஸ்தியை கரைத்தால் அது கல்லாக மாறிவிடும் என்பது ஐதீகம்.இந்த தளத்திற்கு வந்து இறக்கும் உயிர்களை அன்னை விருத்தாம்பிகை தன் மடியில் கிடத்தி தன் புடவையால் விசிறி விடும் போது அந்த உயிர்களின் பாவங்கள் நீங்கிவிடுகிறது. சிவபெருமான் அருகில் விருத்தாம்பிகை அமர்ந்துக்கொண்டு உயிர்கள் மோட்சம் அடைவதற்காக நமச்சிவாய என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசிக்கிறார் என தலப்புராணம் கூறுகிறது. அதனால்தான் என்னவோ இந்த ரகரியத்தை தெரிந்துகொண்ட பல அடையாளம் தெரியாத வயதான முதியவர்கள்  தங்களுக்கு பாவம் நீங்கி மோட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விருத்தாச்சலம் நகரில் வந்து இறந்துவிடுகின்றனர்.

ஞானிகளுக்கு ஆசி கொடுத்த பழமலை:
ஒரு முறை திருவண்ணாமலைக்கு செல்ல வந்த குருநமச்சிவாயர் என்ற சித்தர் இந்ததளத்தில் தங்கிய போது கடும் பசி ஏற்பட்டது. பசியை போக்க பெரியநாயகியிடம் சோறு வேண்டி கிழத்தி என்று தொடங்கும் ஒரு பாடலை பாடினார். இதனை கேட்ட பெரிய நாயகி கிழத்தி வேடத்தில் வந்து கிழவி சோறு எப்படி கொண்டு வர முடியும் என கேட்டுவிட்டு மறைந்துவிட்டார். பின் குருநமச்சிவாயர் அம்மனை புகழ்ந்து பாடியதும், அந்த பாடலில் மயங்கிய பெரியநாயகி இளம் பெண் வேடத்தில் வந்து காட்சி கொடுத்ததுடன் அவர் உண்பதற்கு உணவு கொடுத்தார். அன்று முதல் பெரிய நாயகி பாலாம்பிகை என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

இத்தலத்து ஈசனான முதுகுன்ற பெருமானை பாட மறுத்துச்சென்ற சுந்தரரை இறைவன் தடுத்து ஆட்கொண்டு தன்னை பாடவைத்து பன்னீராயிரம் பொன் கொடுத்தார். அதனை சுந்தரரால் எடுத்துச்செல்லும் போது களவு போய்விடும் என்பதால் மணிமுக்தாநதியில் அவற்றை போட்டு திருவாரூர் குளத்தில் எடுத்துக்கொள் என்று ஈசன் அருள் கொடுத்ததாக தல வரலாற்றுச்செய்திகள் தெரிவிக்கின்றன.
கர்நாடக மன்னன் ஒருவர் இந்த கோவிலுக்கு வந்த போது பசியால் வாடியதாகவும், அப்போது விருத்தாம்பிகை இளமை வடிவம் எடுத்து பாலூட்டி குமார தேவர் என பெயர் சூட்டினாள் என்பது வரலாறு. குமாரதேவருக்கு விருத்தாசலத்தில் தனிமடம் உள்ளது.
சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இவை 288 லிங்கங்களாக இத்தளத்தில் முருகபெருமானே பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார். இந்த லிங்கங்கள் வடமேற்கு பகுதியில் தனி சன்னதியில் அமைந்துள்ளன.

விநாயகரின் 2ம் படை வீடு:
முருகபெருமானுக்கு ஆறுபடை வீடுகள் இருப்பது போன்று விநாயகருக்கும் ஆறுபடை வீடுகள் உள்ளன. இதில் இரண்டாம் படை வீடாக இத்தளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆழத்து விநாயகர் அமைந்துள்ளார். ராஜகோபுரத்தை அடுத்து இடதுபக்கமாக ஆழத்து விநாயகர் கோவில் 18 அடி ஆழத்தில் அமைந்துள்ளது. காளகஸ்தியில் உள்ளது போல 18 படி இறங்கி சென்று தரிசினம் செய்வது போல பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

ஒரு முறை உலகம் அழிந்த போது இந்த தளம் மட்டும் அழியாமல் இருந்தது, என்ற புராண சிறப்பையும் இக்கோவில் பெற்றுள்ளது. சிவ தளங்களில் 1008 தளங்கள் சிறப்பானதாக கூறப்படுகிறது. இதில் நான்கு தளங்கள் முக்கியமானது. அதில் விருத்தாசலமும் ஒன்றாகும். சிவனின் தேவார பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 220 வது தேவாரத் திருத்தளமாகும்.

5 தொழிலின் ரகசியங்கள்:
இந்த கோவிலில் பிரம்மோற்சவம், ஆடிப்பூரம், அம்பாள் விசேஷம், வசந்த உற்சவம், ஆனித்திருமஞ்சனம், ஆருத்ரா தரிசினம், கந்தர் சஷ்டி, சூரசம்காரம் ஆகிய விழாக்கள் சிறப்பாக நடைபெறும். பவுர்ணமி, அமாவசை, பிரதோஷ தினங்களில் பக்தர்கள் அதிகளவில் பங்கேற்று சாமி தரிசினம் செய்வார்கள். இந்த கோவிலில் நடைபெறும் மாசிமாதத் திருவிழா என்பது படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய இத்தளத்து சிவனின் 5 தொழில்களையும் குறிக்கும் வகையில் நடத்தப்படுகிறது. முதல் நாள் கொடியேற்றத்தை படைத்தல் தொழிலையும், 2ம் நாளில் இருந்து 8ம் நாள் வரை நடைபெறும் விழா காத்தல் தொழிலை குறிக்கும். 9ம் நாள் தேர்திருவிழா சூரசம்ஹார தொழிலையும், 10ம் நாள் தீர்த்தவாரி திருவிழா அருளல் தொழிலையும், அன்று இரவே கொடி இறக்கும் விழாவை மறைத்தல் தொழிலையும் குறிக்கிறது என்பது ஐதீகம்.

மாசி மகத்தன்று சுமங்கலி பெண்கள் தங்கள் கணவர் இறந்துவிட்டால் விதவையான உடன், தங்களது தாலியை கழட்டி மணிமுக்தா நதியில் விடுவதை ஐதீகமாக கொண்டுள்ளனர். மேலும் தங்கள் மூதாதையர்களுக்கு விருத்தாசலம் மணிமுக்தாற்றில் திதி கொடுத்தால் அவர்களின் ஆத்மா சாந்தியடைவதாகவும், உடனடி ஆசி கிடைப்பதாகவும் மக்கள் நம்புகின்றனர்.

 பெரியநாயகி அன்னை பதிகம், சேக்ஷாத்திர கோவை வெண்பா, பழமலை நாதர் அந்தாதி, பெரியநாயகி விருத்தம், கலித்தொகை, பிட்சாடன நவமணி மாலை, கருதரிசின பதிகம், பிள்ளை தமிழ் ஆகிய நூல்கள் இத்தளத்தை பற்றி பாடப்பட்டுள்ள நூல்களாகும்.

இத்தளத்து பெருமானை வழிபட்டால் இம்மை மருமை பயன்கள் கிடைக்கும் என்று சம்பந்தர் பாடியுள்ளார். மணிமுக்தாநதியில் நீராடினால் சித்தி பெருவதுடன் முக்தி கிடைக்கும் என புராண நூல்கள் குறிப்பிடுகின்றன.

5ன் சிறப்புகள்:
இக்கோவிலின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இங்கு எல்லாமே ஐந்து ஐந்தாக உள்ளது.
5 மூர்த்தங்கள்; விநாயகர், முருகன், சிவன், சக்தி, சண்டிகேஸ்வரர்
5 இறைவனின் திருநாமங்கள்; விருத்தகிறீஸ்வரர், பழமலைநாதர், விருத்தாசலேஸ்வரர், முதுகுன்றீஸ்வரர், விருத்தகிரி.
5 விநாயகர்; ஆழத்து விநாயகர், மாற்றுரைத்த விநாயகர், முப்பிள்ளையார், தசபுஜகணபதி, வல்லப கணபதி
இறைவனை தரிசினம் கண்ட 5 பேர்; உரோமச முனிவர், விபசித்து முனிவர், குமாரதேவர், நாதஸ்சர்மா, அனவர்த்தினி
5 கோபுரங்கள்; கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் கண்டராதித்தன் கோபுரம்.
5 பிரகாரங்கள்; தோரோடும் திருச்சுற்று, கைலாயதிருச்சுற்று, வன்னியடி திருச்சுற்று, அறுபத்தி மூவர் திருச்சுற்று, பஞ்சவர்ண திருச்சுற்று.
5 நந்திகள்; இந்திரநந்தி, வேதநந்தி, ஆத்மநந்தி, மால்விடை நந்தி, தர்மநந்தி

இதேபோல 5 கொடி மரங்கள், உள் மண்டபம், 5 வெளிமண்டபம், 5 வழிபாடுகள், 5 தேர், இந்த தளத்திற்கு 5 பெயர்கள் என எல்லாமே ஐந்து ஐந்தாக அமைந்துள்ன. இது எந்த ஊரிலும், எந்த கோவிலிலும் காணகிடைக்காத பாக்கியமாகும்.

வானொளித்திடல்:
சுதந்திர போராட்ட காலத்தின் போது விருத்தாசலத்தில் அமைந்துள்ள வானொலி திடலில் பல முக்கிய தலைவர்கள் உரையாற்றியுள்ளனர். இந்த திடலில் உரையாற்றாத தலைவர்களே இல்லை என கூறலாம். விருத்தாசலம் ஜங்ஷனில் ரயிலில் நின்றபடி காந்தியடிகள் மக்களிடையே சுதந்திர போராட்ட உரையாற்றியுள்ளார் என்பது வரலாறு. இதேபோல சத்ரபதி சிவாஜி என்ற பேரரசர் செஞ்சி கோட்டைக்கு தனது படையுடன் சென்ற போது விருத்தாசலம் வந்து தங்கிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதேபோல வானொளி திடல் அருகில் தீர்த்த மண்டப தெருவிற்கு செல்லும் முகப்பு பகுதியில் ஒரு நினைவு கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கல்லில் டெல்லி மகுடாபிஷேகம், மாட்சிமை தாங்கிய ராணி மேரி 1911 ம் ஆண்டில் கார்த்திகை மாதத்தில் வந்து சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதேபோல ஆங்கிலேயர் காலத்தில் வந்த ஆங்கியே முக்கிய தலைவர்கள் சம்பந்தமாக வைக்கப்பட்ட நினைவு கல்வெட்டுகள் காலப்போக்கில் சாலை விரிவாக்கத்தின் போது அப்புறப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

கோவில் கோட்டையானது:
விருத்தகிரீஸ்வரர் கோவில் முகலாய ஆட்சி காலத்தில் கோட்டையாக மாற்றப்பட்டதற்கு சான்று விருத்தகிரீஸ்வரர் கோவில் தேரோடும் வீதிகளின் பெயர்கள் தென்கோட்டை வீதி, வடக்கு கோட்டை வீதி என கோட்டையின் பெயர்களிள் அழைக்கப்படுகிறது. அதன் பின்பு பிரெஞ்சு, மற்றும் ஆங்கியேர் ஆட்சி காலத்தின் தான் கோட்டை கோவிலாக மாற்றப்பட்டுள்ளது. இதேபோல நாச்சியார்பேட்டையில் ஒரு குகை உள்ளது. இந்த குகையில் இருந்து விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு சுரங்க பாதை ஒன்று உள்ளதாக இன்றளவும் தெரிவிக்கின்றனர்.

3.5 கோடி ஆண்டுகள் பழமையான சுண்ணாம்புகல்:
விருத்தாசலத்தில் 7.2.1900 ம் ஆண்டில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக அரசு கெசட்டில் கூறப்பட்டுள்ளது.  மணிமுக்தாற்றின் கிழக்கு பகுதியில் உள்ள ஆயியார் மட பாதையில் காணப்படும் இரிடேசியஸ் என்கின்ற சுண்ணாம்பு கல் பாறைகள்                                                                                        சுமார் 3.5 கோடி ஆண்டுகள் பழைமையான பாறையாகும் என புவியியல் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர், அதனால் விருத்தாசலம் எப்போது தோன்றியது, கோவில் எப்போது தோன்றியது என வறையறுத்து கூற முடியாத அளவிற்கு பழமையான ஊராகும். விருத்தகிரீஸ்வரர் மிகவும் பழமையான கோவில் என்பதாலும், மொத்தம் 74 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த கல்வெட்டுகளில் பராந்தக சோழனில் இருந்து கண்டராதித்த சோழன், வீர விஜயராயர், முப்பிடி கிருஷ்ணபதி உள்ளிட்ட பல்வேறு அரசர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர்., சுந்தரர், குமாரதேவர், சிதம்பர சுவாமிகள், குருநமச்சிவாயர், இலிங்க ரெட்டியார், சொக்கலிங்க சிவபிரகாச சுவாமிகள், ராமலிங்க சுவாமிகள் ஆகியோர் விருத்தாசலம் வந்து விருத்தகிரீஸ்வரரை தரிசினம் செய்து சென்றுள்ளார்கள் என்பதற்கு சான்றாக அவர்கள் பாடிய பாடல்களே உதாரணமாக உள்ளது. தேவாரம் முதல் பிரம்ம கைவர்த்தப் புராணம் வரை 20க்கும் மேற்பட்ட செய்யுள்களில் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரரை பற்றி புகழ்ந்து பாடப்பட்டுள்ளது.
பல்வேறு சிறப்புகளை உடைய விருத்தாச்சலம் இன்று வரலாற்று ஆய்வாளர்களின் சொர்க்கபுரியாக விளங்கி வருகிறது. பல்வேறு வரலாற்று பேராசிரியர்களும், வரலாறு படிக்கும் மாணவர்களும் விருத்தாசலம் வந்து விருத்தகிரீஸ்வரர் கோவில், மணிமுக்தாறு மற்றும் சுண்ணாம்பு கல், கல்வெட்டுகள் குறித்து பல்வேறு ஆய்வுகளிள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

தே.மு.தி.க தலைவர் நடிகர் விஜயகாந்த் கட்சி தொடங்கி முதன் முறையாக விருத்தாச்சலத்தில் போட்டியிட்டு தனது கட்சியின் ஒரே ஒரு எம்.எல்.ஏ வாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டசபைக்கு சென்று பின்னர் எதிர் கட்சி தலைவரானார் என்பதும் சிறப்பானதாகும். மேலும் விருத்தகிரி, விருத்தாசலம் உள்ளிட்ட பல்வேறு சினிமா, குறும்படங்களும் விருத்தகிரீஸ்வர் கோவில், மணிமுக்தாறு மற்றும் முந்தரிகாடுகளில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. 



காந்தி கோவில்

காந்தி கோவில்

விருத்தாசலம் அருகே முதனை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் முதுகுன்றீஸ்வரர் என்ற சிவன் கோவிலும், செம்புலிங்க அய்யனார் என்ற 2 கோவில்களும் பிரசித்திப்பெற்ற கோவில்களாகும். முந்தரி காடுகள் சூழ நடுவே அமைந்துள்ள இந்த கிராமம். ஈசன் தலம் இருப்பதாலோ என்னவோ எப்பொழுது பார்த்தாலும் இந்த கிராமத்தில் அமைதி நிலவும். மேலும் இந்த ஊரின் நடுவில் அமைந்துள்ள குளக்கரையும், குளத்தில் மலர்ந்துள்ள தாமரை மலர்களும் எழில் கொஞ்சும். குளக்கரையில் அப்பகுதியில் பெருசுகள் அமர்ந்து தங்கள் பழைய கதைகளையும் அசைப்போட்டு கொண்டிருப்பார்கள்.

அந்த அழகான குளக்கரையில்தான் அமைந்துள்ளது, காந்தி கோவில். ஆம் மகாத்மா காந்திக்கே கோவில் கட்டி வழிப்பட்ட முதல் கிராமம் முதனை கிராமம் தான். காந்தியடிகள் இறந்தவுடன், இந்த கிராமத்தைச் சேர்ந்த செம்புலிங்க படையாட்சி என்பவர் காந்தியின் அஸ்தியை எடுத்து வந்து அதனை பாதுகாக்கும் வகையில் சிறிய கோவில் அமைத்து அந்த அஸ்தி பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும் காந்திக்கு உருவ சிலை வைத்தும் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. வெள்ளி, செவ்வாய் கிழமைகளிலிலும், குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தியடிகள் பிறந்த தினம், நினைவு நாள் உள்ளிட்ட முக்கிய தினங்கள் அன்று இந்த கோவிலில் காந்திக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவதுடன், கோவிலுக்கு முன்புறம் அமைந்துள்ள தேசிய கொடியும் வானுயர பறக்கும். தற்போது இந்த கோவிலை செம்புலிங்க படையாட்சியாரின் பேரன் பாரதிதாசன் என்பவர் பராமரித்து வருகிறார்.
கடந்த அக்டோபர் 2ந் தேதி அன்று காந்தி பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. அப்போது மகாத்மாவின் வாழ்வை போற்றும் வகையில் எழுத்தாளர் ரத்தின புகழேந்தி, தலைமை ஆசிரியர் வீரபாண்டியன், மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி காந்தியை வழிப்பட்டதுடன், பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர். மகாத்மாகவே இருந்தாலும் அவரையும் ஒரு கூட்டம் வசைபாடிகொண்டிருக்கும் நேரத்தில் அவருக்கு கோவில் கட்டி வழிபடும் முதனை கிராம மக்களை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும்.



கோரக்கர் சித்தர்








நம்பியோரை கைவிடாத கோரக்கர் சித்தர்
எண்ணி வந்தது நடப்பதாக பக்தர்கள் நம்பிக்கை
விருத்தாசலம்,

கோவிலின் அமைப்பு:
கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள விருத்தாசலம் ஒரு ஆன்மிக நகரமாகம். ஆன்மிக சுற்றுலா செல்வபர்கள் விருத்தாசலத்தை என்றும் விட்டதில்லை. பக்தர்கள் அனைத்து கோவில்களுக்கும் சென்று அடையும் அனைத்து நற்பலன்களையும் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரரை தரிசினம் செய்தலே கிடைத்து விடும். மேலும் முன்னாள் எதிர்கட்சி சட்டமன்ற தலைவர் நடிகர் விஜயகாந்த் வெற்றிப்பெற்ற தொகுதி என்பதும் அனைவருக்கும் தெரிந்தது. உலக பிரசித்திப்பெற்ற கொளஞ்சியப்பர் கோவிலும் விருத்தாசலம் பகுதியில் தான் அமைந்துள்ளது. மேலும் பிரசித்திப்பெற்ற தலம் என்றால் கோரக்கர் சித்தரின் ஜீவ சமாதி அமைந்துள்ள மு.பரூர் அன்னபூரணி உடனுரை காசி விஸ்வநாதர் ஆலயம் தான். விருத்தாசலம் அருகில் சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில்தான் உள்ளது, மு.பரூர் என்ற கிராமம். இந்த கிராமத்தை தலைமையிடமாக கொண்டு ஜமின்தார்கள் இப்பகுதி கிராமங்களை ஆட்சி செய்துள்ளனர். அதற்கு சான்றாக இந்த கிராமத்தில் இன்று வரை ஜமீன்தார் குடும்பம் உள்ளது. அப்படிப்பட்ட இந்த கிராமத்தின் நுழைவு வாயிலிலேயே அழகிய வடிவிலே கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார் அன்னபூரணி உடனுரை காசி விஸ்வநாதர்.

இந்த கோவிலை அடைந்தாலே ஒருவித பக்தி உணர்வு தானேகவே வந்து விடுகிறது. கோவிலை சுற்றிலும் மரங்களும், கோவிலின் வளாகத்தில் காணப்படும் மூலிகைச்செடிகளும், குளிர்ந்த காற்றினையும், இதமான நறுமணத்தையும் அள்ளி வீசி கோவிலுக்குள் நம்மை வரவேற்கும். கோவிலுக்குள் நுழைந்ததும் கொடிமரம் கண்ணில் படும். இடது புறமும், வலது புறமும் மேற்கு நோக்கிய முகமாக சூரியனும், சந்திரனும் உள்ளனர். கொடிமரத்தை கடந்து சென்றால் நந்தியும், அவரை கடக்க கோவிலுக்குள்ளே காசி விஸ்வநாதர் ௐ நமச்சிவாய ஒலியுடன், அழகிய சிவலிங்க வடிவில் காட்சியளிக்கிறார். அவரை தரிசினம் செய்யும் போதே எண்ணி வந்த காரியங்கள் சித்தியாகும் என்ற நம்பிக்கை பக்தர்களுக்கு பிறந்து விடுகிறது. அவரை தரிசினம் செய்த பின்பு தாயார் அன்னப்பூரணியை தனி சன்னதியில் சென்று தரிசினம் செய்யலாம். இந்த சன்னதியின் முன் பகுதியில் நுழைவு வாயிலின் மேற்பகுதியில் பல்லவர் காலத்து கல்வெட்டு அமைந்துள்ளது. இதனை வைத்து பார்க்கு போது இந்த கோவில் 2 ஆயிரத்தி 500 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கோவில் என கூறுகின்றனர்.

அடுத்து காசிவிஸ்வநாதர் ஆலயத்திற்கு இடப்புறம் உள்ள கோரக்கர் சித்தர் ஜிவ சமாதிக்கு செல்ல வேண்டும். தரிசினம் செய்யும் போது அமைதியும், ஆற்றலும், நம்பிக்கையும் கிடைத்து விடுகிறது. அவரை குருவாக ஏற்றுகொண்டவர்கள் பலர். அவரை நேரங் கிடைக்கும் போதெல்லாம் பாண்டிச்சேரியின் முன்னாள் முதல்வர் ரங்கசாமி நேரில் வந்து தரிசித்து விட்டு செல்வார். அவரை போலவே யாருக்கும் தெரியால் பல வி.ஐ.பி க்கள் வந்து செல்கின்றார்கள் என கோவில் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். கோரக்கர் சித்தரை சமாதி முன்பு அமர்ந்து தியானம் செய்யலாம்.

எண்ணி வந்த காரியங்களை அவரிடம் தெரிவித்து விட்டு அவர் சமாதி முன்பு  எழுதியுள்ள
ௐ, பசு, பரபதி, பஷீராஜ, நிரதிசயசித்ரூப, ஞானமூர்தேய, தீர்க்க நேத்ராய, கணகண் கம்கங் கெங்லங் லிங், லங், லாலீலம், ஆவ், பாங்ஆம், ஊம், பார்கவ்விய ஜோதி மய, வரப்பிரசன்ன, பாததெரிஸ்ய கோரக்க சரணாயநமஸ்து
என்ற மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும். மேற்கண்ட மந்திரத்தை 48 நாட்கள் தொடர்ந்து ஜபித்து வந்தால் அவர் நேரடியாக பக்தர்களுக்கு காட்சி தந்தருள்வார் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

அவருடைய தரிசினம் முடிந்த பிறகு தெற்கு பார்த்த விநாயகர், தட்சினாமூர்த்தி, லிங்கேஸ்பவர், கன்னீமூல கணபதி, வள்ளி, தெய்வானை உடனுரை முருகன், ஐஸ்வர்ய லட்சுமி, வேப்பிலை மாரியம்மன், துர்கை, சண்டிகேஸ்வரரை தரிசினம் செய்யலாம். சண்டிகேஸ்வரர் மண்டபத்தில் கோர'கர் சித்தர் காவி விஸ்வநாதருக்கு பூஜைகள் செய்யும் புடை சிற்பத்தால் ஆன தத்ரூபமான காட்சியை காணலாம். அதனை தொடர்ந்து பைரவர், நவக்கிரகங்கள், என ஒவ்வொரு தெய்வத்தையும் தரிசினம் செய்யலாம். இந்த கோவிலிலும், இந்த கிராமத்தில் பல்வேறு மூலிகைகள் உள்ளதாகவும், கோரக்கர் சித்தரை நம்பி வருபவர்களுக்கு அவருடைய  ஆத்மா மனித உருவம் எடுத்து அவர்கள் பிணிகள் நீங்குவதற்கான மூலிகைகளை காண்பிக்கின்றார் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

 மேலும் இந்த கோவிலில் தினந்தோறும் காலை 6 மணி, மதியம் 12 மணி, மாலை 4 மணி, இரவு 8 மணி, மற்றும் பவுர்ணமி தினங்களில் காலை 7 மணியில் இருந்து பூஜைகள் ஆரம்பித்து யாகம், ஹோமம், உள்ளிட்டவைகளும், கோரக்க சித்தருக்கு 16 வகையான பூஜைகளும், நள்ளிரவு 12.45 மணிக்கு நிலவு பூஜையும் நடக்கும்.

பூசை பொருட்கள்:
கோரக்கருக்கு நிவேதனமாக வாழைப்பழம், கடுக்காய் தீர்த்தம், அரிசிப்பெறி, அவல், பொட்டுக்கடலையுடன் நாட்டுசர்க்கரை கலவை, இவற்றுடன், கார்த்திகை நட்சத்திர நாள் மற்றும் சனிக்கிழமை கருநீல நிற வஸ்திரம் வைத்து வழிபாடு நடத்தினால் சிறப்பு என கூறுகின்றார்கள்.

கிடைக்கும் பலன்கள்:
 சனி கிரகத்தை பிரதிப்பலிப்பவர் ஆகையால் ஜாதக சனி தோஷங்கள் விலகி நன்மை பயக்கும், விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும், காரியங்களில் வெற்றி கிடைக்கும். படிப்பில் மந்த நிலை இருந்தால் மாறும். நன்மக்கட்பேறு கிடைக்கும். எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும், பிரம்மஹஸ்தி தோஷம் நீங்கும், வீண்பயம் அகன்று தைரியம் உண்டாகும்.

5 வியாழக்கிழமைகள், மற்றும் 5 பவுர்ணமி பூஜைகளில் கலந்து  கொண்டு வேண்டுதல் வைத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொழில் வளர்ச்சி பெறும். குடும்ப பிரச்சினைகளும், தீராத நோய்களும் தீர்ந்து விடும் என பலன் பெற்ற பக்தர்கள் கூறுகிறார்கள்.

 இந்த கோவிலுக்கு விருத்தாசலத்தில் இருந்தும், மங்கலம்பேட்டையில் இருந்தும் பஸ், ஆட்டோக்கள் மூலம் செல்லலாம், விருத்தாசலத்தில் இருந்து டவுன் பஸ் 23, 38, 2 ஆகிய பஸ்களும், நவீன் என்ற தனியார் பஸ்சும் செல்கிறது. மங்கலம்பேட்டையில் இருந்து 23ம் எண் டவுன் பஸ்சும், நவீன், வானவில் என்ற தனியார் பஸ்களும் சென்று வருகின்றன.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
கோரக்கர் சித்தரின் வரலாறு:
சித்தர்கள் 18 பேர். அதில் பெண்ணின் கருவில் இருந்து தோன்றாமல் குப்பையில் கிடந்த சாம்பல் கலந்த திருநீரில் கோரை புற்களில் இருந்து தோன்றியவ-ர். வடமாநிலத்தைச் சேர்ந்தவர் கோரக்கர். டெல்லி அருகே உள்ள கோரக்பூரைச்சேர்ந்த கோரக்க சித்தர் தமிழ்நாட்டில் சதுரகிரியை அடைந்து போகரை தோழராக கொண்டவர். Êசட்டை முனி கோரக்கருக்கு நெருக்கமானவர்கள். முன்னொரு காலத்தில் சிவபெருமான் உமாதேவிக்கு கடற்கரையில் தாரக மந்திரத்தை உபதேசித்த போது தேவி கண் அயர்ந்த போது மீன் குஞ்சி ஒன்று அதை கேட்டு மீன் மனித வடிவமாகியது. சிவன் அதை மச்சேந்திரன் என பெயரிட்டு ஞானத்தை அருள்புரிய அனுப்பி வைத்தார்.

அப்போது மச்சேந்திரர் டெல்லி அருகே உள்ள  கோரக்பூர் என்ற இடத்திற்கு சென்று ஒரு பெண்ணிடம் பிச்சை கேட்டார். அப்போது அந்த பிச்சை போட்ட பெண் மகப்பேறு இல்லாமல் வருந்துவதை கேட்டார். மச்சேந்திரர் அந்த பெண்ணிடம் சிறிது திருநீர் கொடுத்து அதனை நீ உட்கொண்டால் மகப்பேறு அடைவாய் என்றார். அவள் திருநீர் பெற்றதை அறிந்த அக்கம் பக்கத்து பெண்கள் அது போலியானது என கூறவே அந்த திருநீரை அந்த பெண் அடுப்பில் போட்டு விட்டார். பின்பு அடுப்பு சாம்பலுடன் சேர்த்து குப்பையில் போட்டு விட்டாள். 10 வருடங்கள் கழித்து அந்த ஊருக்கு வந்த மச்சேந்திரர் அந்த பெண்ணை அழைத்து உன் மகனை கூப்பிடு என்றார். அப்போது அந்த பெண் பக்கத்து வீட்டு பெண் பேச்சைக்கேட்டு அதை குப்பையில் போட்டுவிட்டதாக கூறிவிட்டார். அந்த இடத்திற்கு சென்று பார்த்த மச்சேந்திரர் அந்த இடத்தில் கோரைப்புல் முளைத்திருப்பதை அறிந்து கோரக்கா என்று அழைத்தார். அப்போது மச்சேந்திரர் திருநீர் கொடுத்த 10 ஆண்டு கால பாலகனாக ஒரு சிறுவன் தோன்றினான். அவனை தன்னுடைய சீடனாக ஏற்றுக்கொண்டார்.

 ஒரு நாள் கோரக்கர் பிச்சையெடுக்கும் போது ஒரு பெண்மணி வடை ஒன்றை அளிக்க அதனை தன்குருநாதரிடம் அளித்தார். அடுத்த நாளும் அதனை போல வடைவேண்டும் என கோரக்கரின் குருநாதரான மச்சேந்திரர் கேட்க வடை தந்த வீட்டிற்கு சென்று கோரக்கர் மீண்டும் வடை கேட்டார். அந்த பெண் வடை இல்லை. தினமும் வடை செய்ய முடியுமா? இன்று தயிர் சாதம் தான் உள்ளது என கூற கோரக்கர் என் குருநாதர் வடைதான் கேட்டார் என்றார்-. அப்போது அந்த பெண் வடைகேட்டால் பரவாயில்லை. இதுவே அவர் உன் கண்ணை கேட்டாள் கொடுத்திருப்பாயா?- என்றார். அதற்கு கோரக்கர் என் குருநாதர் எதனை கேட்டாலும் தருவேன் என கூறி தன் கண்ணை பெயர்த்து அந்த பெண்ணிடம் கொடுத்து அதற்கு பதிலாக வடைக்கேட்டார். அவரின் உணர்ச்சிகளை கண்ட அந்த பெண் உடன் வடைகளை சுட்டுகொடுத்தார். வடையை சுவைத்த மச்சேந்திரர் கோரக்கரின் கண் குறித்து விசாரித்தார். கோரக்கர் நடந்ததை கூறினார். கோரக்கரின் அன்பை அறிந்த மச்சேந்திரர் அவருக்கு மீண்டும் கண் வரச்செய்தார்.

மச்சேந்திரர் மலையாள நாட்டிற்கு சென்று அந்த நாட்டு அரசி பிரேமலா என்பவளை மணந்து இல்வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தார். அவர்களுக்கு மீனநாதன் என்ற குழந்தை பிறந்தது. இதனை அறிந்த கோரக்கர் அங்கிருந்து தன் குருவை எப்படியும் கூப்பிட்டு வரவேண்டும் என அறிந்து மலையாள நாட்டை அடைந்தார். குருவை பார்த்து குருவே புறப்படுங்கள், நம்இருப்பிடம் செல்லலாம் என்றார். வழிச்செலவிற்கு என்று பிரேமலா ஒரு தங்க கட்டியை மச்சேந்திரரிடம் கோரக்கருக்கு தெரியாமல் கொடுத்து அனுப்பி வைத்தாள். வழியில் தென்பட்டவர்களிடம் இங்கே கள்வர்கள் பயம் உண்டோ? எனக்கேட்டு கொண்டே சென்றார். இதனை கவனித்த கோரக்கர் தன் குருவுக்கு தெரியாமல் தங்ககட்டியை எடுத்து வீசி விட்டார். அதற்கு பதில் செங்கல் ஒன்றை வைத்தார். ஒரு நாள் பையை திறந்த மச்சேந்திரர் செங்கல்லை கண்டு கோரக்கர் மீது கோபமடைந்தார். தன்னுடைய பொருளை கைப்பற்றிய நீ என்னுடைய சீடனல்ல. இனி என்னுடன் சேராதே? என்றார்.குருவை நல்வழிப்படுத்த எண்ணிய கோரக்கர் ஒரு சிறிய மலை மீது ஏறி சிறுநீர் கழித்தார். அப்போது அந்த மலை தங்க மலையானது. கோரக்கர் குருவை பார்த்து தங்களுடைய பொருளை எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். அறியாமையில் உழன்ற மச்சேந்திரரை பிடித்த மாயை விலக மனம் தெனிந்த மச்சேந்திரர் தன் சீடனை பாராட்டினார். எனினும் கோரக்கர் தனியே பிரிந்து சென்று தவம் புரிந்து அதிர்ஷ்டமா சித்திகளையும், காய சித்திகளையும் பெற்றார்.

கோரக்கர் திருகயிலை சென்றார். அங்கு எதிர்பட்ட  அல்லாமாதேவர் என்பவரை நீங்கள் யார் என்றார். அவர் இறந்து போகும் உடலில் பற்று கொண்டுள்ளவர்களை மதித்து சொல்லத்க்கது ஒன்றும் இல்லை என்றார். அதற்கு கோரக்கர் நான் குருவின் அருளினால் காய சித்தி பெற்றவன் என்றார். அல்லாமா தேவர் காயசித்தி வாழும் நாளை தான் அதிகமாக்கும். அன்று நிலைத்திருக்க உதவாது. இதனை அழியா உடல் என கூறுவது வீண் என்றார். வீண் தர்க்கம் வேண்டாம். இதோ நிருப்பித்து காட்டுகின்றேன் என்று கூறி அல்லாமாதேவரிடம் ஒரு வாளினை கொடுத்து உன் தோல் வலிமையானால் என்னை வெட்டு என்றார். அதேபோல வெட்ட உடலின் மீது பட்ட வாள் இரும்பில் பட்ட வாளை போல தெறித்தது, உடலில் காயம் அடையவில்லை. அப்போது அல்லாமாதேவர் நல்லது என் திறமையை நிருபித்தாய். இதோ இந்த வாளால் நீ என்னை வெட்டு என்றார். கோரக்கர் வெட்ட வாள் அல்லாமரின் உடலில் புகுந்து வந்தது. வெட்டும்போது காற்றை வெற்றுவது போலிருந்தது. கோரக்கர் உண்மையை உணர்ந்து தன்னை விட சக்தி மிகுந்த அல்லமா தேவரை வணங்கி தன் தவறை ஒப்புகொண்டார். உடம்பில் உள்ள பற்றினை நீக்கி உன் உண்மை நிலையை அறிவாய் என்றார்.

 வரதமேடு எனும் காட்டில் தவம் செய்ய சென்ற போது பிரம்ம முனியை சந்தித்து அவருடன் கோரக்கர் நண்பராகினார். இருவரும் தவம் செய்து அரிய சித்திக்களை அடைந்து 5 தொழில்களையும் இயக்கும் ஆற்றல் பெற யாகம் செய்ய தொடங்கினார்கள். யாகத்தில் இருந்து 2 அழகான பெண்கள் வந்தனர். அப்போது அங்கு வந்த அக்கினியும், வாயு பகவானும் அந்த பெண்களை மோகித்து நின்றனர். யாகத்தை தடை செய்த அந்த 2 பெண்கள் மேல் கமண்டல தண்ணீரை தெளிக்க கோபங்கொண்டு ஒரு பெண்ணை புகையிலையாகவும், ஒரு பெண்ணை கஞ்சா மூலிகையாகவும் மாற்றினார். அந்த பெண்களை மோகித்த வாயுவும், அக்கினியும், நீரும், நெருப்புமாக மாறி அச்செடிகளுடன் சேர்ந்தனர். அப்போது சிவபெருமான் தோன்றி இறந்தவர்களை பிழைக்க வைக்கும் சக்தி உங்களுக்கு கிடைக்கும் எனவும், நீங்கள் உண்டாக்கிய இந்த செடிகள் மூலிகைகளாக திகழும் என்றார்.

 கோரக்கர் தான் அறிந்த ஞானங்களை பாடல்களாக பாடினார். அந்த நூல்கள் தீயவர்களிடம் கிடைத்திட கூடாது என்று நினைத்த சித்தர்கள் அவரது ஆசிரமத்திற்கு வந்தனர். இதனை அறிந்த கோரக்கர் அரிசியுடன் கஞ்சாவை சேர்த்து அடை செய்து சித்தர்களின் கண்ணில் படும் படியாக வைத்தார். இதனை உண்ட சித்தர்கள் மயங்கினார்கள். அப்போது முக்கியமான நூல்களை கோரக்கர் மறைத்து வைத்துகொண்டார். சித்தர்கள் எழுந்து பார்த்த போது அங்கு கிடைத்த நூல்களை எடுத்துச்சென்றனர். கோரக்கர் சந்திரரேகை, நமநாமச திறவுகோல், ரஷமேகலை, முத்தாரம், மலைவாக்கம், கற்பம், முத்திநெறி, அட்டகர்மம், சூத்திரம், வசார சூத்திரம், மூலிகை, தண்டகம், கற்ப  சூத்திரம், பிரம்ம ஞானம், உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். அகத்தியர் முதற்கொண்டு கோரக்கரை 18 சித்தர்களும் தொடர்பு கொண்டுள்ளனர்.

 பல ஆயிரம் ஆண்டுகள் பல தவம் செய்து பல அரிய சித்துக்களை பெற்ற கோரக்கர் கொல்லிமலை வந்தார். அங்கு பாம்பாட்டி சித்தரும், போக சித்தரும் முருகன் சிலை செய்து கொண்டிருந்தனர். அவர்களுடன் நட்பு பாராட்டிய கோரக்கர் சிலைகள் செய்ய உதவினார். தொடர்ந்து அங்கிருந்து பிரிந்து மு.பரூருக்கு கோரக்கர் வந்தார்.
மு.பரூர் வந்தடைந்த கோரக்கர் அங்கு அன்னப்பூரணி காசிவிஸ்வநாதர், தெற்கு விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கேஸ்பவர், துர்கையம்மன், நந்திகளையும் பிரதிஷ்டை செய்து சுமார் 500 வருடங்கள் பூஜைகள் செய்தும், தன்னை தேடி வரும் மக்களுக்கு மூலிகை வைத்தியம் பார்த்து வந்தார். மேலும் ஒரு நாள் தன்னுடைய சீடர்களிடம் தான் ஜீவ சமாதியடைவதாக கூறிவிட்டு தற்போது ஜீவ சமாதி உள்ள இடத்தில் அமர்ந்து தியானம் செய்தவர் திடீர் என அங்கிருந்து மாயமானார். அப்போது அவ்விடத்தில் தீபம் மட்டுமே காட்சி தந்தது. கடந்த 2014ம் ஆண்டு ஜீவ சமாதியில் உள்ள லிங்கத்திற்கு பூஜைகள் நடந்து கொண்டிருந்த போது ஜோதியாக பக்தர்களுக்கு காட்சி தந்தருளியுள்ளார். இதனை பக்தர்கள் செல்போனில் படமாக எடுத்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தான் தற்போது அவர் ஜீவ சமாதி  முன்பு வைக்கப்பட்டுள்ளது.

அதனை  தொடர்ந்து  வேளாங்கண்ணிக்கு சென்று மாதாகுளத்தில் இருந்த மூத்த சித்தரான காகபுசண்டாரை தன் குருவாக ஏற்று கொண்டார். பின்பு நாகப்பட்டினம் மாவட்டம் வடக்கு பொய்கையில் ஆசிரமம் அமைத்து  தங்கியிருந்தார். அங்கு கோரக்கர் தன்னை தேடி வரும் சாதுக்களுக்கு உணவு படைப்பதற்காக அன்னக்காவடி எடுத்து யாசகம் வாங்கி வந்து படைத்தருளினார் என்றும் நம்பப்படுகிறது. அங்கும் கோரக்கருக்கு ஜீவசமாதி உள்ளது. இன்று வரை அங்கு இந்த யாசகம் வாங்கும் பழக்கம் உள்ளது.