Tuesday, 25 October 2022

லஞ்சம்

"வாழ்க்கையில், பணமும்,பதவியும்"
திரும்பி பார்த்தால்,

"அரசு பணியில் பல துறையில் பணியாற்றி உள்ளேன். சம்பளத்தை விட கிம்பளம் (லஞ்சம்) நிறையவே பெற்று சந்தோஷமாக இருந்தேன்.
ஆண்டவன் நம்மை நல்லா வச்சிருக்கான் என்று சந்தோஷமாக கோவிலுக்கு சென்று பூஜை புனஸ்காரம் செய்து வந்தேன்.
எனக்கு ஒரே மகன். நல்லா எம்.பி.ஏ. வரை படிக்க வச்சேன். 
ஒரு கிரவுண்ட் இடம் வாங்கி கார் பார்கிங், வீடு, கார், தோட்டம் என நாங்கள் சந்தோஷமாக இருந்தோம்.
நானும் ஓய்வு பெற்றேன். 
என் மகனுக்கு திருமணம் செய்து வைத்து, சென்னையில் ரூ.80,00,000-தில் பிளாட் வாங்கி குடியேறினேன்.

மருமகளும் கர்ப்பமாக இருந்தாள். 
7-ம் மாதம் சீமந்தம் வைக்க ஏற்பாடு செஞ்சிக்கிட்டு இருந்தேன். ஒரு போன் வந்து என்னை தூக்கி போட்டது. போனில், அவர் சொன்ன விசயம்..."உங்கள் மகன் பைக் விபத்தில் அரசு மருத்துவமனையில் உள்ளார் வந்து பாருங்க..." என்று.
விழுந்தடித்து சென்று பார்த்தேன். 
என் மகன் கோமா நிலைக்கு தள்ளப்பட்டான். என் மருமகளுக்கு ஆண் பிள்ளை பிறந்தது. ஆனால் என் மகன் இரண்டு மாதத்தில் உயிர் பிரிந்து விட்டான்.

என் மருமகள் அவர்கள் வீட்டுக்கு குழந்தையுடன் சென்று விட்டாள். பின்னர் அவளுக்கு ஜீவனாம்சம் மற்றும் பேரன் வாழ்க்கை செலவு என வழக்கு தொடர்ந்து எங்கள் சொத்துக்களை எல்லாம் வாங்கி கொண்டாள்.

இப்போது எனக்கு கிடைக்கும் பென்சனை வச்சுத்தான் காலம் போகுது. சாப்பாடு செலவுகள், வீட்டுக்கு வாடகை போக முட்டி வலி, சர்க்கரை போன்ற நோய்கள் பற்றிக்கொண்டதால் மருந்து செலவு வேறு...

அப்போது தான் யோசித்தேன், 'ஏன் நம் வாழ்க்கை இப்படி ஆனது என்று...'
என் மனம் சொன்னது, 'நீ வாங்கிய லஞ்சம் தான் உன் வாழ்வை சீர்ழித்தது...' என்று.
'சரி... லஞ்சம் வாங்காமல், என்னுடன் சம காலத்தில் பணிபுரிந்த என் நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டேன்.'அவர் என் நிலை கண்டு மனம் சங்கடப்பட்டார்.
'சரிப்பா நீ எப்படி இருக்க..?' என கேட்டேன்.அவர் சொன்னார், "நிம்மதியாக இருக்கேன்...உண்ண உணவு, உடுக்க உடை, பேரன் பேத்தி, ஓய்வு பணத்தில் சிறியதாக ஒரு வீடு, பையன், பொண்ணு தனியார் கம்பெனி வேலை...நானும் என் மனைவியும் நிம்மதியாக இருக்கோம்.." என்று சொன்னார்.

என்னை யாரோ செருப்பால் அடித்தது போல் உணர்ந்தேன்.நானும் கோவிலுக்கு போனேன் விபூதி குங்குமம் வைத்தேன். அபிஷேகம் எல்லாம் செஞ்சேனே. எனக்கு மட்டும் ஏன் இப்படி..? உணர்ந்தேன் நாமும் கோவிலுக்கு போனது பத்துல ஒண்ணா போச்சே. நல்லா இருக்கும் போது உண்மையை உணரவில்லையே.உயிரற்ற பொருள் வாங்கி குவித்தேன். என் உயிர் உள்ளே உள்ள பொருளை இழந்தேன்.
இன்று...வாழ்க்கையை இழந்து நிற்கிறேன்.

💢அரசன் அன்று கொல்வான்.
💢தெய்வம் நின்று கொல்லும்.
💢மக்களுக்கு செய்யும் சேவையே.
💢மகேசனுக்கு செய்யும் சேவை.

@ ஓய்வு பெற்ற ஒரு அரசு அதிகாரியின் ஒப்புதல் புலம்பல் இது. 

True story of a Government staff.

லஞ்சம் வாங்கும் அனைவருக்கும் நல்ல பாடம்...!!!

இந்த பதிவு சற்று எல்லோருக்கும் சென்றடைய செய்யவும். அப்படியே EB , RTO, Corporation, Taluka, Registration Office-யில்  பணி புரிபவர்களை இந்த பதிவை படிக்க வைத்தால் நல்லது.

💢லஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர் !💢

@ படித்த பதிவு.

Thursday, 30 June 2022

வருமுன் காப்போம் - கருப்பை வாய் (ம) கருப்பை உள் புற்றுநோய்

விருத்தாசலம், ஜூலை.1
பெண்களுக்கு ஏற்படும் புற்று நோய்களில் கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் கருப்பை உள் புற்றுநோய் (என்டோ மெட்டீரியல் புற்றுநோய்) ஆகிய புற்று நோய்களிலிருந்து பெண்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது குறித்து விருத்தாசலம் மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர் டாக்டர் சபரி கூறியதாவது:-
*கருப்பை வாய் புற்றுநோய்*
பெண்களின் பிறப்பு உறுப்பும் - கருப்பையும் இணைக்கும் இடம் கருப்பை வாய். இந்த இடத்தில் ஏற்படும் புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் முற்றிலும் குணப்படுத்தலாம். இந்த புற்றுநோய் இளம் வயதில் திருமணம் செய்து நீண்ட காலம் உடலுறவில் ஈடுபடுகிறவர்கள், பலருடன் உடலுறவு கொள்பவர்கள், பால்வினை நோய் உள்ளவர்கள், புகை பிடிப்பவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த நோய் உடல் மற்றும் பிறப்பு உறுப்புகளில் மரு உருவாக்கும் எச்பிவி என்னும் வைரஸ் கிருமியால் பெரும்பாலும் ஏற்படுகிறது. இந்த நோயின் அறிகுறிகள் உடலுறவின்போதும், அதற்கு பின்னும் வலி ஏற்படுவது, உடலுறவு பின் உதிரப்போக்கு, மாதவிடாய் நாட்களுக்கு இடையிலும், மாதவிடாய் நின்ற பின்பும் உதிரப்போக்கு ஏற்படுவது,  வயிற்றுப் பகுதியில் வலி ஏற்படுவது போன்ற அறிகுறிகள் தென்படும். கருப்பை வாயில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களை முன்கூட்டியே கண்டறிந்து புற்றுநோய் ஏற்படாமலும் மற்றும் புற்றுநோயின் ஆரம்ப நிலையில் கண்டறியவும் பல்வேறு பரிசோதனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொற்றா நோய்கள் பிரிவில் செய்யப்படுகின்றன. வயா, வில்லை, கால்போஸ்கோபி, பாப் பரிசோதனைகள் ஆகியவை செய்யப்படுகின்றன. மூன்று வருடங்களுக்கு ஒரு முறை பாப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 21 வயதுக்கு மேற்பட்ட உடலுறவில் ஈடுபடும் அனைத்து பெண்களும் கட்டாயமாக இந்த பரிசோதனைகளை கட்டாயமாக செய்து கொள்ள வேண்டும். தொற்ற நோய்கள் கண்டறியும் சோதனைகள் முறையாக செய்யப்படுவதாலும், மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாலும் இந்த புற்றுநோய் ஆரம்ப நிலையில் கண்டறியப்படுவதாலும், பெண்களின் தற்போதைய திருமண வயது தள்ளிப் போவதாலும் கருப்பை வாய் புற்றுநோய் குறைந்து வருகிறது.
*கருப்பை உள் புற்றுநோய்*
அதற்கு பதிலாக வாழ்க்கை முறை, உணவு முறை மாற்றம், உடல் பருமன், போன்ற காரணங்களால் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவு அதிகரிப்பதால், எண்டோ மெட்ரியல் கேன்சர் அதாவது கருப்பை உள்பகுதி கேன்சர் ஏற்படுவது தற்போது அதிகரித்து வருகிறது. மாதவிடாய் நாட்கள் சீராக இல்லாமல் அடிக்கடி வருவது, தொடர்ந்து உதிரப்போக்கு இருப்பது, பிறப்பு உறுப்பில் ரத்தம் வருவது, அடிவயிறு வலி  ஆகியன இந்த கேன்சரின் அறிகுறிகள் ஆகும். இதற்கான பரிசோதனைகளையும் ஆலோசனைகளையும் மருத்துவர்களிடம் முறையாக பெற்று இந்த புற்றுநோய் வருவதற்கு முன்பே தடுத்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும். மார்பக புற்றுநோய், குடல், இரப்பை புற்றுநோய், சினைப்பை புற்றுநோய் உள்ளவர்களின், ரத்தம் சம்பந்தமான நெருங்கிய உறவினர்களுக்கு இந்த எண்டோமெட்ரியல் கேன்சர் வர அதிகம் வாய்ப்புள்ளது. எனவே குடும்பத்தில் ஏதேனும் ஒரு புற்றுநோய் உள்ளவர்கள் இருந்தால் அந்த குடும்பத்தில் உள்ள பெண்கள் கருப்பை உள்  சோதனைகளை குறிப்பிட்ட இடைவெளிகளில் செய்து கொண்டு, இந்த புற்றுநோயிலிருந்து காத்துக் கொண்டு நலமுடன் வாழலாம். இவ்வாறு விருத்தாசலம் மகப்பேறு மற்றும்  மகளிர் நல மருத்துவர் டாக்டர் சபரி தெரிவித்தார்.