நாமக்கல் அருகே
சாட்டையால் அடித்து பேய் ஓட்டும் வினோத நிகழ்ச்சி
எருமப்பட்டி, அக்.9-
எருமப்பட்டி அருகே சாட்டையால் அடித்து பேய் ஓட்டும் வினோத நிகழ்ச்சி நடந்தது.
திருவிழா
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பவித்திரம் அருகே உள்ளது வெள்ளாளப்பட்டி கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற அச்சப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆயுதபூஜைக்கு மறுநாள் விஜயதசமி நாளில் திருவிழா நடைபெறுகிறது. அப்போது சாமி அழைக்கப்பட்டு தப்பாட்டம் நடைபெறும். பின்னர் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இதைத்தொடர்ந்து சாட்டையால் அடித்து பேய் ஓட்டும் வினோத நிகழ்ச்சி நடைபெறும்.
இதேபோல் இந்த ஆண்டும் அச்சப்பன் கோவில் திருவிழா நேற்று நடந்தது. சாமியை அலங்கரித்து, காட்டு கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தின் முன்பு பக்தர்கள் தப்பாட்டம் ஆடியபடி வந்தனர். அங்கு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
சாட்டையால் அடித்து....
அதனை தொடர்ந்து சாட்டையால் அடித்து பேய் ஓட்டும் வினோத நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது காட்டு கோவில் முன்பு வரிசையாக பெண்கள் மண்டியிட்டு, கைகளை உயர்த்தியபடி இருந்தனர்.
மண்டியிட்டு இருந்த பெண்களின் கைகளில் பூசாரி சாட்டையால் ஓங்கி அடித்தார். பெரும்பாலான பெண்கள் ஒரே அடியில் கைகளை உதறியபடி எழுந்து சென்று விட்டனர். சில பெண்கள் 4, 5 அடி வரை வாங்கி கொண்டு அப்படியே நின்றனர்.
குழந்தை பேறு
இதுகுறித்து சாட்டையடி வாங்கிய பெண் ஒருவர் கூறியதாவது:-
சாட்டையால் அடித்து பேய் ஓட்டும் நிகழ்ச்சி இங்கு பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. பேயின் பிடியில் சிக்கியவர்கள், பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி, திருமண தடை நீங்கவும், குழந்தை பேறு கிடைக்கவும், கொடிய நோய்களில் இருந்து குணமாகவும் பெண்கள் சாட்டை அடி வாங்குவது வழக்கம். பேயின் பிடியில் சிக்கியவர்கள் மட்டுமே ஒன்றுக்கு மேற்பட்ட சாட்டையடி வாங்குவர். மற்றவர்கள் ஒரே அடியில் எழுந்து விடுவர்.
இங்கு நேர்ச்சையாக கொண்டு வரப்படும் ஆடுகளை வெட்டி, அனைவருக்கும் விருந்து அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment