Saturday, 5 October 2019

பரூர் முகாச பரூர் ஆனது எப்படி:

பரூர் முகாச பரூர் ஆனது எப்படி:

மூகாசா என்ற ஆங்கிலேய தளபதி பரூர் பாளைய கார ஆட்சியை கைப்பற்றுவதற்காக படையெடுத்து வந்துள்ளான். அப்போது பாளைய காரர் சரணடையாததால் மங்கலம்பேட்டையில் இருந்து போரிட தயாரானான். முதலாவதாக பாளையகாரர் ஆட்சிக்குட்பட்ட மங்கலம்பேட்டையில் இருந்த மங்கலநாயகியம்மன் கோவிலை தகர்க்க முடிவு செய்தான். அர்ச்சகர் அந்த படை தளபதியை எச்சரித்தும் கேட்கவில்லை. அப்போது அவன் வாள் மங்கலநாயகியம்மன் பீடத்தை பதம் பார்த்தது. ஆனால் அந்த பீடம் அசைய மறுத்து வாள் தெறித்து விழுந்தது. அந்த பீடத்தை தாக்கியதற்கான ஆதாரங்கள் இன்றும் உள்ளதாம். அப்போது அம்மன் வெகுண்டெழுந்து மூர்க்கமாகி தனது வில்லினாள் அம்பெய்தாள். அந்த வில் மூகாசாவின் கண்களை குருடாக்கியது. அப்போது அவனது படை வீரர்களின் கண்களும் குருடாகியது.  அந்த படைதளபதியை எச்சரித்த அர்ச்சகர் நான் எச்சரித்தும் கேட்காததால் குருடாகிவிட்டீர்களே என கூற மூகாசா நெடுஞான்கிடையாய் விழுந்து அம்மனை வணங்க சினம் தணிந்த அம்மன் படைதளபதிக்கும் வீரர்களுக்கும் மீண்டும் பார்வை கிடைக்க அருள்புரிந்தாள். பார்வை பெற்ற மகிழ்ச்சியில் மூகாசாவும் அவன் படையும் போரை கைவிட்டு அங்கிருந்து சென்று. ஆங்கிலேயரும், நவாப் முகமது அலியும் கூட்டு படை அமைத்திருந்ததால் மூகாசா நவாப் முகமது அலியிடம் நடந்ததை கூற முகமது அலி அம்மனின் சக்தியை உணர்ந்து இந்த கோவிலுக்கு மானியமாக நிலங்களை எழுதி தந்துள்ளான். அதனை இன்றும் நவாப் மானியம் என அழைக்கிறார்கள். மீண்டும் மூகாசா தமது படையினருடன் சென்று பரூர் பாளையகாரருடன் போரிட்டு காயமடைந்து மரணத்தின் விளிம்பில் இருந்த போது தமது நினைவாக ஏதேனும் செய்தருளும் படி பாளையகாரரிடம் வேண்டியுள்ளான். பாளையகாரரும் அதற்கு இசைவு தெரிவிக்க மூகாசா பெயரில் மூகாச பரூர் என அழைக்க வேண்டும் என வேண்டிகொள்ள பரூர் மூகாச பரூர் ஆனது என வரலாறுகள் தெரிவிக்கின்றன.

பரூர் என்ற பருவூர்:
பருவூர் என அழைக்கப்பட்ட இந்த ஊரை கி.பி.1753ம் ஆண்டில் பிரெஞ்சி மற்றும் மராத்தியப்படைகள் இணைந்து தாக்கிய போது பரூர் ஜமீன் சரணடைந்ததாக தென்னாற்காடு மாவட்ட அரசு கெசட்டில் 489ம் பக்கம் குறிப்பிட்டுள்ளதாகவும் அதன் பிறகே இந்த ஊருக்கு முகாசா பரூர் என அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
பரூவூர் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக தெரிகிறது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் கல்வெட்டுகள் அனைத்தும் நாஜேந்திரசிம்ம வளநாட்டு இருங்கோளப்பாடி பருவூர் கூற்றத்து நெற்குப்பை திருமுதுகுன்றம் என குறிப்பிடப்படுவதால் விருத்தாசலத்தை விட பெரிய ஊராக பரூர் இருந்ததாக அறிய முடிகிறது.

கல்வெட்டுகள்:
உலகில் உள்ள 7 சிறந்த நகரங்களில் ஒன்று  காஞ்சி மாநகரம். தொண்டை நாட்டின் பல்லவர்களின் தலைநகரமாக இந்த ஊரை கி.பி. 892ல் முதலாம் ஆதித்த சோழனால் கைப்பற்றப்பட்டது. இதனால் பல்லவர்களால் முன்பு போல தலைதூக்க முடியவில்லை. ஆதலால் பல்லவ பரம்பரையினர் கச்சி என்ற காஞ்சிபுரத்தில் இருந்து தங்கள் ஊர்பெயருடன் புறப்பட்டு ராயர் என இணைத்து கச்சிராயராக மாறி தென்னாற்காடு மற்றும் திருச்சி மாவட்டங்களில் அதாவது சோழநாடு, நடுநாட்டில் குடியேறியதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. பல்லவர்கள் காடவ ராயர்கள் என அழைக்கப்பட்டதால் நடுநாட்டிற்கு வந்த பரூர் பாளையகாரர்கள் பல்லவர்கள் என்பது புலனாகிறது. முகாச பரூர் ஜமீன் குடும்பத்தின் இளவரசி ராசாத்தி என்பவருக்கும், பிச்சாவரம் சோழப்பரம்பரையைச் சேர்ந்த சாமிதுரை சூரப்ப சோழனார் என்பவருக்கும் திருமணம் நடந்ததால் பரூர் ஜமீன் மற்றும் சோழர்களுக்கு இடையே பெண் கொடுத்து எடுக்கும் படலம் தொடர்ந்து வந்துள்ளது. எலவனாசூர் சிவன் கோவிலில் உள்ள கல்வெட்டில் பரூர் உடையார் தேவர் கச்சிராயருடைய பிள்ளை காளத்திநாதர் நில தானம் வழங்கியதற்கான குறிப்புகள் உள்ளது.

அரண்மனை:
பரூர் ஜமீன் அரண்மனை கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயே படையெடுப்பின் போது வரிகட்ட மறுத்ததால் பீரங்கி குண்டுகளின் தாக்குதலால் அழிந்து போனதாக கூறப்படுகிறது. யானைப்படை, குதிரைப்படை, ஒட்டகப்படை, காலாட் படை ஆகிய படைகள் சிறந்து விளங்கின-. இன்றும் அரண்மனை இருந்ததற்கான ஆதாரமாக சில தூண்கள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன. யானைகள் கட்டப்பட்டிருந்ததற்கு ஆதாரமாக யானை கட்டி கல் இன்றும் அங்கும் உள்ளது. ஆங்கிலேயேர்கள் பாளையகாரரின் குதிரைப்படையை அழிப்பதற்காக ஒரே இடத்தில் அனைத்து குதிரைகளையும் நிறுத்தி கொன்றதால் ஊரின் ஒரு பகுதியை குதிரை கொல்லி மேடு என அழைக்கப்படுகிறது.

பல்லவ மன்னர்களாக வாழ்ந்த காடவராயர்கள் ஆங்கிலேயர் காலத்திற்கு முற் பகுதியில் பாளையகாரர்களாகவும், ஆங்கியேர் காலத்தின் பின் பகுதியில் ஜமீன்தார்கள் எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளனர். 63 நாயன்மார்களில் ஒருவராக காடவராயர் கோன் என்பவர் இடம் பெற்றுள்ளார். பல வரலாற்று ஆய்வுகள் மூலமும், அன்னமங்கல கல்வெட்டின் மூலமும், பரூரை ஆண்ட காடவராயர்கள்தான் செஞ்சி கோட்டையை கட்டியதாக கூறப்படுகிறது. இவர்களின்  அனுமன் கொடியை பயன்படுத்தி வந்துள்ளனர்.  பரூரை ஆண்ட மன்னன் காடவராயர் கோப்பெருஞ்சிகன் குறித்த கல்வெட்டுகள் விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர், சிதம்பரம் நடராஜர் கோவில் வடக்கு கோபுரங்களில் காணப்படும் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. பரூர் பாளையகார குறுநில மன்னர் ஆட்சி காலத்தில் பயன்படுத்திய வாள் உள்ளிட்ட போர் கருவிகள், கஜ, புஜ ஆயுதங்கள் பரூர் மற்றும் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் உள்ள வீடுகளில் காணமுடிகிறது.

பரூர் அரண்மனை கோட்டையை ஆங்கிலேயேர்கள் பீரங்கி கொண்டு தகர்த்த போது அந்த பீரங்கி பல வருடங்களாக அந்த பகுதியில்தான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதனை கடந்த 1964ல் தான் ஜமின் குடும்பத்தினர் அரசிடம் ஒப்படைத்துள்ளனர்.



பிரசவத்தை எளிதாக்கிய வாள்:
பரூரில் ஜமீன் குடும்பத்தில் பராமரிக்கப்பட்டுவரும் வாள் போன்ற கத்திக்கு ஒரு வரலாறு உள்ளது. ஆம் இந்த வாலினை வாங்கிச்சென்று  கர்ப்பிணிகள் பிரசவிக்க முடியாமல் அவதியுறும் போது ஒரு கயிறு மூலம் கர்ப்பிணி படுத்திருக்கும் நிலையில் அவருக்கு மேலாக அந்த வாளினை கட்டி தொங்க விட்டு அந்த வாளில் விளக்கெண்ணெய்யை விட வேண்டும். அவ்வாறு அந்த வாளின் வழியே வழிந்து வரும் விளக்கெண்ணெய் கர்ப்பிணியின் தொப்புள் பகுதியில் சொட்டு சொட்டாக படும் போது எளிதாக குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம். இன்றும் அந்த முறை அப்பகுதியில் பயன்பாட்டில் உள்ளது.

பல்லவர் காலம்:
பரூர் வரதராஜர்பெருமாள் கோவிலில் உள்ள நரசிம்மர் சிலை மற்றும் அனுமன் சிலை உள்ளிட்ட பல்வேறு சிலைகள் பல்லவர் காலத்து சிலைகளாக உள்ளன. இவற்றில் பல சிலைகள் போர் நடந்த போது சேதமடைந்த நிலையில் இன்றும் உள்ளது. கோவிலின் அருகே அரசமரத்தடியில் கலைநயமிக்க புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது, இந்த சிலை அருகில் உள்ள வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்டதாகவும், பல்லவர் காலத்தில் செய்யப்பட்ட சிலை எனவும் தெரிகிறது. ஆனால் இந்த சிலை சமண மதத்தை தோற்றுவித்த மகா வீரரின் சீடர்களில் 22 வது சீடர் சிலை என்ற கூற்றும் நிலவி வருகிறது. பல்வேறு ஊர்களில் இருந்து வரும் சமண மத பக்தர்கள் இந்த சிலையை வணங்கி செல்வதுடன், அந்த சிலையை வைத்து கோவில் அமைக்கவும் அந்த ஊர் பெரியவர்களிடம் கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இவற்றை வைத்து பார்க்கும் போது இப்பகுதியில் அரசர்கள் ஆட்சி காலத்தில் இந்து, வைணவம், பௌத்தம், சமண சமயங்களும் வளர்ச்சி பெற்றிருந்ததை அறிய முடிகிறது.


கோரக்கர் சித்தரின் வரலாறு:


கோரக்க சித்தர்:
மு.பரூரில் அன்னபூரணி உடனுரை காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 2 ஆயிரத்தி 500 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கோவில் என கூறுகின்றனர்.

காசிவிஸ்வநாதர் ஆலய வளாகத்தில் இடப்புறத்தில் கோரக்கர் சித்தர் ஜிவ சமாதி அமைந்துள்ளது. தரிசினம் செய்யும் போது அமைதியும், ஆற்றலும், நம்பிக்கையும் கிடைத்து விடுகிறது. அவரை குருவாக ஏற்றுகொண்டவர்கள் பலர். அவரை நேரங் கிடைக்கும் போதெல்லாம் பாண்டிச்சேரியின் முன்னாள் முதல்வர் ரங்கசாமி நேரில் வந்து தரிசித்து விட்டு செல்வார். அவரை போலவே யாருக்கும் தெரியால் பல வி.ஐ.பி க்கள் வந்து செல்கின்றார்கள் என கோவில் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். கோரக்கர் சித்தரை சமாதி முன்பு அமர்ந்து தியானம் செய்யலாம்.

எண்ணி வந்த காரியங்களை அவரிடம் தெரிவித்து விட்டு அவர் சமாதி முன்பு  எழுதியுள்ள
ௐ, பசு, பரபதி, பஷீராஜ, நிரதிசயசித்ரூப, ஞானமூர்தேய, தீர்க்க நேத்ராய, கணகண் கம்கங் கெங்லங் லிங், லங், லாலீலம், ஆவ், பாங்ஆம், ஊம், பார்கவ்விய ஜோதி மய, வரப்பிரசன்ன, பாததெரிஸ்ய கோரக்க சரணாயநமஸ்து
என்ற மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும். மேற்கண்ட மந்திரத்தை 48 நாட்கள் தொடர்ந்து ஜபித்து வந்தால் அவர் நேரடியாக பக்தர்களுக்கு காட்சி தந்தருள்வார் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
சித்தர்கள் 18 பேர். அதில் பெண்ணின் கருவில் இருந்து தோன்றாமல் குப்பையில் கிடந்த சாம்பல் கலந்த திருநீரில் கோரை புற்களில் இருந்து தோன்றியவ-ர் என்பதால் கோரக்கர் என அழைக்கப்பட்டார். வடமாநிலத்தைச் சேர்ந்தவர் கோரக்கர். டெல்லி அருகே உள்ள கோரக்பூரைச்சேர்ந்த கோரக்க சித்தர் தமிழ்நாட்டில் சதுரகிரியை அடைந்து போகரை தோழராக கொண்டவர். Êசட்டை முனி கோரக்கருக்கு நெருக்கமானவர்கள்.

முன்னொரு காலத்தில் சிவபெருமான் உமாதேவிக்கு கடற்கரையில் தாரக மந்திரத்தை உபதேசித்த போது தேவி கண் அயர்ந்த போது மீன் குஞ்சி ஒன்று அதை கேட்டு மீன் மனித வடிவமாகியது. சிவன் அதை மச்சேந்திரன் என பெயரிட்டு ஞானத்தை அருள்புரிய அனுப்பி வைத்தார்.

அப்போது மச்சேந்திரர் டெல்லி அருகே உள்ள  கோரக்பூர் என்ற இடத்திற்கு சென்று ஒரு பெண்ணிடம் பிச்சை கேட்டார். அப்போது அந்த பிச்சை போட்ட பெண் மகப்பேறு இல்லாமல் வருந்துவதை கேட்டார். மச்சேந்திரர் அந்த பெண்ணிடம் சிறிது திருநீர் கொடுத்து அதனை நீ உட்கொண்டால் மகப்பேறு அடைவாய் என்றார். அவள் திருநீர் பெற்றதை அறிந்த அக்கம் பக்கத்து பெண்கள் அது போலியானது என கூறவே அந்த திருநீரை அந்த பெண் அடுப்பில் போட்டு விட்டார். பின்பு அடுப்பு சாம்பலுடன் சேர்த்து குப்பையில் போட்டு விட்டாள். 10 வருடங்கள் கழித்து அந்த ஊருக்கு வந்த மச்சேந்திரர் அந்த பெண்ணை அழைத்து உன் மகனை கூப்பிடு என்றார். அப்போது அந்த பெண் பக்கத்து வீட்டு பெண் பேச்சைக்கேட்டு அதை குப்பையில் போட்டுவிட்டதாக கூறிவிட்டார். அந்த இடத்திற்கு சென்று பார்த்த மச்சேந்திரர் அந்த இடத்தில் கோரைப்புல் முளைத்திருப்பதை அறிந்து கோரக்கா என்று அழைத்தார். அப்போது மச்சேந்திரர் திருநீர் கொடுத்த 10 ஆண்டு கால பாலகனாக ஒரு சிறுவன் தோன்றினான். அவனை தன்னுடைய சீடனாக ஏற்றுக்கொண்டார். பலருக்கு சீடராக இருந்து பிரிந்து மு.பரூர் வந்தடைந்தார், கோரக்கர்.

அங்கு அன்னப்பூரணி காசிவிஸ்வநாதர், தெற்கு விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கேஸ்பவர், துர்கையம்மன், நந்திகளையும் பிரதிஷ்டை செய்து சுமார் 500 வருடங்கள் பூஜைகள் செய்தும், தன்னை தேடி வரும் மக்களுக்கு மூலிகை வைத்தியம் பார்த்து வந்தார். மேலும் ஒரு நாள் தன்னுடைய சீடர்களிடம் தான் ஜீவ சமாதியடைவதாக கூறிவிட்டு தற்போது ஜீவ சமாதி உள்ள இடத்தில் அமர்ந்து தியானம் செய்தவர் திடீர் என அங்கிருந்து மாயமானார். அப்போது அவ்விடத்தில் தீபம் மட்டுமே காட்சி தந்தது. கடந்த 2014ம் ஆண்டு ஜீவ சமாதியில் உள்ள லிங்கத்திற்கு பூஜைகள் நடந்து கொண்டிருந்த போது ஜோதியாக பக்தர்களுக்கு காட்சி தந்தருளியுள்ளார். இதனை பக்தர்கள் செல்போனில் படமாக எடுத்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தான் தற்போது அவர் ஜீவ சமாதி  முன்பு வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆன்மிகத்திலும், அரசர் ஆட்சி தலைமையிடமாகவும் முகாசப்பரூர் பல வரலாறுகளை தன்னகத்தே கொண்டுள்ளது.













No comments:

Post a Comment